சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்: சபாநாயகர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களைக் கண்டிக்காத முதல்வரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், சபாநாயகர் தனபாலுக்கு...
மதுரை: பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களைக் கண்டிக்காத முதல்வரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவரை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காமராஜ் உள்ளிட்ட நால்வர் சிறையில் சென்று சந்தித்தனர். இது அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை எழுப்பியது.
இதனைக் கண்டித்து மறைந்த அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் நால்வர் மற்றும் அவர்களை கண்டிக்கத் தவறிய முதல்வர் பழனிசாமி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்
இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு உயர் நீதிமன்றத் கிளை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸினை சபாநாயகர் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.