பாக். போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான்! விமானி சிறைப்பிடிப்பு!
பாகிஸ்தானின் போர் விமானம் ஆப்கானிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து...
பாகிஸ்தானின் போர் விமானம் ஆப்கானிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டு அதன் விமானி உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபுல், கந்தாஹர் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 27) பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில், ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கிழக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் வஹிதுல்லா முஹம்மதி கூறுகையில், சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மேலும், ஆப்கானிஸ்தான் உடனான மோதல்களில் இதுவரை 300-க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.