சிறையில் கைதி மீது தாக்குதல்: போலீஸார் 4 பேர் சஸ்பென்ட்!
திருவனந்தபுரத்தில் காவல் விசாரணையில் கைதி தாக்கப்பட்டதாக 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்
கேரளத்தில் காவல் விசாரணையில் கைதி தாக்கப்பட்டதாக 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரத்தில் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீனு பேபி என்பவர், சிறையில் இருந்தபோது அவர் மீது உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார், காவல் அதிகாரிகளான சுனில், சிஜுகுமார், கிரிஷ் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கோட்டை உதவி ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தியதில், ஜீனு மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
பைக் திருட்டு வழக்கில் கொச்சியில் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரும் வழியில் போலீஸ் வாகனத்துக்குள் வைத்தும், சிறையில் படுத்திருந்தபோதும் ஜீனுவின் தலைமுடியை இழுத்து போலீஸார் தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணை தெரிய வந்தது.
மேலும், ஜீனு கொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவரை திருவனந்தபுரத்தில் கைது செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸாரின் தாக்குதலால், ஜீனுவின் சிறுநீரகங்கள் மற்றும் தசைகளில் காயம் ஏற்பட்டு, அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜீனு, தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.