முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

புதுதில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன் என்று உச்ச நீதிமன்றம் தமிழகத்திடம் கேள்வி எழுப்பியாது.

அத்துடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் மத்திய அரசு இசைவு தெரிவித்தது என்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு பதிலாக கூடுதல் தலைமைவழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில், நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும் என்று தெரிவித்தார். அதன்படி உடனடியாக சட்டமானது அமலுக்கு வருமென்று தெரிகிறது.

அதேபோல தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் இருவரும் அவசர சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டனர்  சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்பதாலேயேதான் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞரும் தெரிவித்தார்.

அவர்களது வாதங்களைக் கேட்ட பின் நீதிபதிகள் அன்று பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் விபரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் வாரியாக தகவல்களைத் தர வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் சார்ட் வடிவில் இருக்க வேண்டும்.

தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டமானது எந்த வகையிலும் மாணவர்களின் நலனுக்கு விரோதமாக அமைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

இவ்வாறு தெரிவித்த நீதிமன்றம் வழக்கினை 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

அதன்படி இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது.  

இவவறு அவர் தனது வாதங்களை முன்வைத்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வினை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.  நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையானது 'நீட்' தேர்வு அடிப்படையில் தான் நடக்க  வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் மருத்துவ கலந்தாய்வினை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னரே முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →