தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி 'திடீர்' ராஜிநாமா!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜிநாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜிநாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக தலைமை வழக்கறிஞர் என்பது அரசுக்கும்,நீதித்துறைக்கும் இடையே சுமுகமான உறவு நிலவுவதற்கு அடிப்படையாக அமையக் கூடிய ஒரு முக்கியமான பதவியாகும். அத்துடன் அரசுக்கு பல்வேறு சட்ட விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் வழங்குவதும் இவரது பணியாகும்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பொழுது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சோமையாஜியின் ராஜிநாமாவினைத் தொடர்ந்து, முத்துக்குமாரசாமி அந்த பதவிக்கு வந்தார்.
தற்பொழுது பதவியில் ஒரு வருட காலம் பூர்த்தியாக உள்ள நிலையில் முத்துக்குமாரசாமி தன்னுடைய பதவியினை ராஜிநாமா செய்துள்ளார். தன்னுடைய உடல்நலக் குறைபாடு காரணமாக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் சமீபத்தில் ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அரசின் தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி அந்தப் பரிந்துரையை செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த பின்னணியில் முத்துக்குமாராசாமியின் ராஜிநாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.