ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதி 20-ஆவது மைல்கல் பகுதியில் குடற்புழு நோய் தாக்கியதில் ஆண் யானை உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனப் பகுதியில் உள்ள 20-ஆவது மைல்கல் என்ற இடத்தில் ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர் யானையின் உடலைப் பரிசோதனை செய்ததில், இறந்தது 30 வயதுடைய தந்தம் இல்லாத மக்னா ஆண் யானை என்பது தெரியவந்தது. பொதுவாக ஆண் யானைக்குப் பெரிய தந்தம் இருக்கும். மக்னா வகை ஆண் யானைக்கு தந்தம் இருக்காது. கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது.
சேறும் சகதியுமாக உள்ள இந்தக் குட்டையில் தண்ணீர் குடித்துள்ள இந்த யானை சற்று தூரம் நடந்து சென்று கீழே சாய்ந்துள்ளது. நீண்ட நேரம் உயிருக்குப் போராடிய யானை வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.
கால்நடை மருத்துவர் அசோகன், வனத் துறையினர் யானையின் உடற்கூறுகளைப் பரிசோதனை மேற்கொண்டதில் குடற்புழு நோயால் யானை உயிரிழந்தது தெரியவந்தது. அதன் பிறகு, யானையின் உடல் அதே இடத்திலேயே புதைக்கப்பட்டது.