பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்: டிடிவி தினகரன் தகவல்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரன், வியாழன் அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவினை சந்திக்கச் சென்றார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சிறையில் உள்ள சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து மவுன விரதத்தில் இருக்கிறார். அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் விவரித்தேன். சரி என்று தலையாட்டிக் கேட்டுக் கொண்டார்.
Advertisement
தற்பொழுது மீண்டும் எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் நடந்து வருவது ஏற்கனவே 'சீல்' செய்யயப்பட்ட பகுதிகளில் உள்ள பொருட்கள் குறித்து கணக்கெடுப்பதற்கு மட்டுமே என்றே அறிகிறேன். மற்றபடி இது சோதனை அல்ல.
தற்பொழுது எனது ஆதரவாளர்கள் சிலரை கட்சியிலிருந்து நீககி வருகிறார்கள். ஆனால் கட்சிக்கு துரோகம் புரிந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரைத்தான் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். யாரையும் நீக்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது.
தேர்தலின் துவக்கத்திலிருந்து சின்னம் தொடங்கி எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பிரச்னைகளையும் கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன்.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விளக்கமளிக்குமாறு சசிகலாவுக்கு விடுக்கப்பட்டுள்ள சம்மன் குறித்து கேட்ட பொழுது, ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை 15 நாட்கள் அவகாசத்தில் அளிக்குமாறுதான் கேட்கபட்டுள்ளது. எனக்கும் அது போலவே சம்மன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அழகிரி தற்பொழுது திமுகவின் செயல் தலைவரைக் குறை கூறுவது எல்லாம் உள்கட்சி பிரச்சினை. அவருக்கு ' 'பொலிட்டிகள் மைலேஜ்' வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார். ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டிருந்தால் கூட நாங்கள்தான் கண்டிப்பாக வென்றிருப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.