சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பியான சத்தியபாமா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வரிசையில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்.பியான சத்தியபாமா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.
அப்பொழுது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளனா. இது மிகவும் வருத்தம் தருகிறது. சசிகலா ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு ஈடு யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதாவின் நல்லாசியுடன் புதிய ஆட்சி அமையும். தொடர்ந்த போன் கால்களால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்திய எனது தொகுதி மக்களுக்கு நன்றி. மக்களின் வாக்குகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு மட்டும் விழுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.