தூத்துக்குடியில் உள்ள மாணவர்கள் விளையாட்டு விடுதியை 15 நாள்களுக்குள் திறக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்குரைஞர் அதிசயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான கல்வி, விளையாட்டு பயிற்சி, தங்கும் விடுதி, உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்த ஆணையத்தின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 49 மாணவர்கள் லாசர் மேல்நிலைப்பள்ளியிலும், ஒரு மாணவர் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
அந்த மாணவர்கள், தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள்ள 2 சிறிய அறைகளில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உள்ளனர். ஒரு அறையில் 27 பேரும், மற்றொன்றில் 23 பேரும் உள்ளனர். அந்த அறைகள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. படுக்கை விரிப்புகள், மின்விசிறிகள் உள்ளிட்ட எந்த வசதியும் அங்கு செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மாணவர்கள் தங்குவதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் விடுதி ஒன்று கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. அந்த விடுதியை திறந்து மாணவர்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் விடுதியை 15 நாள்களுக்குள் திறக்க உத்தரவிட்டனர்.