முகப்பு
தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வங்கிக் கடன்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110- ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகள் மூலம் ரூ.32 ஆயிரத்து 848 கோடி கடனாக அளிக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் பெற்றுத் தருவதன் வாயிலாக பெண்கள் மேம்பாடு அடையவும் மற்றும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் மூலம் ரூ.32, 848 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7 ,000 கோடி வங்கிக் கடன் அளிக்கப்படும் .
சாலைகள் மேம்பாடு: தமிழகத்தில் ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 8,875 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், நிகழ் நிதியாண்டில் ரூ.800 கோடியில் 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2,659 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள், 25 உயர்நிலைப் பாலங்கள் ரூ.1,254 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஏதுவாக, ஊராட்சி அளவிலான 1000 கூட்டமைப்புக் கட்டடங்கள் தலா ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.600 கோடியில் கட்டப்படும்.
தூய்மை பாரதம் இயக்கம் மற்றும் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 26.49 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள், தலா ரூ.12,000 ஊக்கத் தொகையில் கட்டப்படும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதன்படி, தெருவில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகள் ரூ.200 கோடியிலும், மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் தள்ளுவண்டிகள் ரூ.100 கோடியிலும், மின்கலம் மூலம் இயக்கப்படும் தள்ளுவண்டிகள் ரூ.200 கோடியிலும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கென ரூ.500 கோடி செலவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.