முகப்பு
தமிழ்நாடு

மின்னணு குடும்ப அட்டைகள் திருத்தம் எப்படி?: தமிழக அரசு விளக்கம்

மின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தம் செய்வது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

மின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தம் செய்வது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாத அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து நுழையலாம். இதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசிக்கு கடவுச் சொல் வரும். அதனைப் பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படம், இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிட்டால் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகே, மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும்.

அட்டைதாரர் அவரிடம் உள்ள இணையதள வசதி மூலமாக இணையதளத்திலோ அல்லது TNEPDS என்ற செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தியோ திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.

அரசு இணைய சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் மேற்கொள்ளலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அவர்களின் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

அட்டைதாரரின் பகுதிக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

சரியான விவரங்கள், புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிப்படாத அட்டைதாரர்கள் விவரம் நியாய விலைக் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் உரிய வகையில் திருத்தம் செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.