ஆளுநர் பதவியில் இருக்க கிரண்பேடி தகுதி அற்றவர்: அமைச்சர் மல்லாடி ஆவேசம்
ஆளுநர் பதவியில் இருக்கவே தகுதி அற்றவர் கிரண்பேடி என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவையில் ஆவேசமாக கூறினார்.
புதுச்சேரி: ஆளுநர் பதவியில் இருக்கவே தகுதி அற்றவர் கிரண்பேடி என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவையில் ஆவேசமாக கூறினார்.
சென்டாக் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் மல்லாடி பேசியதாவது:
கடந்த சில நாள்களாக மாநில அரசின் பெயரை சேதப்படுத்த துணை நிலை ஆளுநர் நாடகம் நடத்தி வருகிறார். மருத்துவபட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பாக தொடக்கம் முதலே கடந்த 5 மாதங்களாக பல கூட்டங்கள் நடத்தினேன். மருத்துவக் கல்லூரிகள் நிர்வாகங்களை அழைத்துப் பேசினேன்.
கடந்த 29-ம் தேதி சென்டாக் மூலம் அரசு தேர்வு செய்ய மாணவர்களை சேர்ப்பது அரசின் கடமை எனத்தெரிவித்தேன். 2 நாள்களுக்கு முன்பு மணக்குளவிநாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா கல்லூரிகளை
அழைத்துப் பேசினேன். உத்தரவாதம் பெற்று மாணவர்களை சேர்க்குமாறு கூறினேன். முதலில் சேர்க்கிறோம் என ஒப்புக் கொண்டனர். ஆனால் பின்னர் நீதிமன்றத்தை காரணம் காண்பித்து மறுத்தனர்.
சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களே நானே நேராக கல்லூரிகளுக்கு சென்று சேர்ப்பேன். தலைமைச் செயலாளர், அரசு குறித்து பேசக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என எவ்வாறு ஆளுநர் கூறலாம். ஆளுநர் பதவியில் கிரண்பேடி இருக்க தகுதி அற்றவர்.