வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து...
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் மார்ச் 26 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 23 அன்று வெளியான நிலையிலும், அதில் பெயர் இடம்பெறவில்லை என்றால் தகுதியுள்ள ஒருவர், படிவம் 6 மூலமாக உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். படிவம் 7 மூலமாக நீக்கம் செய்யலாம், படிவம் 8 மூலமாக வாக்குச்சாவடி மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் இணையதளம், செயலி மூலமாகவும் ஆட்சியர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே நடை பெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலும்.
பெயர் விடுபட்டு இருப்பின் பெயர் சேர்க்க கால அவகாசம் மார்ச் 26 ஆம் தேதி வரை உள்ளது. இதனை பயன்படுத்தி தகுதியானவர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்கும் ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்றும்படி கேட்டுகொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.
வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுடைய இல்லத்துக்கே சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கு தபால் வாக்கு முறையையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 23- ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.