தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி - சபாநாயகர் தனபால் 'திடீர்' சந்திப்பு!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் தற்பொழுது முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் இடையே 'திடீர்' சந்திப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் தற்பொழுது முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் இடையே 'திடீர்' சந்திப்பு நடைபெற்று வருகிறது.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை இன்று காலை முதல் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். தற்பொழுது வரை ஒட்டுமொத்தமாக 21 எம்.எல்.ஏக்கள் அவரை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே வேளையில், ஒன்பது மாவட்ட எம்.எல்.ஏக்களை முதல்வர் பழனிசாமி இன்று மாலை மூன்று மணி அளவில் சந்திக்க உள்ளார்
இதனிடையே வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது. அதற்கான செயல்திட்டங்களை தீர்மானிக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டமானது நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் தற்பொழுது முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசி வருகிறார். குறிப்பாக அதிமுக மூன்று அணிகளாக இருக்கும் நிலையில், சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும், வெட்டுத் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்வது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது.
ஏன் என்றால் வெட்டுத் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட்டால் அது ஆளும் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சிக்கலான சூழ்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலான முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது.