முகப்பு
தமிழ்நாடு

மலேசியாவில் கைதி போல நடத்தினர்: சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மலேசியாவில் தான் சிறைக் கைதி போல் நடத்தப்பட்டதாக மலேசியாவில் இருந்து திரும்பி அனுப்பப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர்

Updated On : 10 ஜூன், 2017 at 9:27 AM
பகிர்:

சென்னை: மலேசியாவில் தான் சிறைக் கைதி போல் நடத்தப்பட்டதாக மலேசியாவில் இருந்து திரும்பி அனுப்பப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மலேசியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.

இதையடுத்து நேற்று இரவு சென்னை வந்தடைந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

Advertisement

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற என்னை இலங்கையில் இருந்து வந்துள்ளீர்களா, நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா? என்று மலேசியா போலீஸார் என்னை கேட்டார்கள். நான், விடுதலைப் புலிகளின் ஆதரவாளன், இந்திய தமிழன் முன்னாள் எம்.பி' என்றேன். பின்னர் என் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும், மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர் எனக் கூறி தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மலேசியாவில் தான் சிறைக் கைதி போல் நடத்தப்பட்டதாகவும் சாப்பிடக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் வைகோ கூறினார்.

மேலும், என்னை ஒரு கைதி போல நடத்தினர். உணவுக் கூடத்துக்கு கூட செல்ல அனுமதிக்கவில்லை. காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். நேற்று இரவு சென்னையில் சாப்பிட்டதுதான் இதுவரை சாப்பிடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

1989-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்க தடை செய்யப்படவில்லை. 1989-இல் பிரபாகரனை சந்திக்க இலங்கை சென்றிருந்தேன் என்று கூறினார்.

ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே எனக்கு விசா மறுத்துள்ளது. மலேசியாவில் இருக்கும் இந்திய தூதர் திருமூர்த்தி மிகவும் வருத்தப்பட்டார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசின் சதி உள்ளதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களும் ஈழப்படுகொலை குறித்த பேச்சும் சர்வதேச அளவில் எந்த மூலையிலும் எழக் கூடாது என்பதுதான் இலங்கையின் திட்டம் என்னை தடுத்து நிறுத்தியதற்கு இலங்கை அரசு தான் காரணம் என்று வைகோ தெரிவித்தார்.

இந்தியா - மலேசியா இடையே நல்ல உறவு உள்ளது. மலேசியாவில் என் மீது ஒரு வழக்குக் கூட இல்லை. இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்த வைகோ, இதுகுறித்து பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுத உள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியாவில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், விஜயகாந்த், ஜி.கே.வாசன், திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் தமக்கு ஆதரவாக பேசியது நெகிழ்ச்சி தருவதாகவும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் வைகோ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.