தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும்: எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டி!
குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக, சட்டப் பேரவை உறுப்பினர் சரவணன் வீடியோவில் வாக்குமூலம் கொடுத்துள்ள விவகாரம் குறித்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் .
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பொழுது இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இயலாது என்று கூறி சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். இதையடுத்து தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், குமார் ஆகியோரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யபடுவதற்கு முன்னதாக, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம் பின்வருமாறு:
முன்னதாக எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நமபிக்கை வாக்கெடுப்பு நடந்த பொழுது, கூவத்தூர் விடுதியில் நடந்த கூத்துக்கள் பற்றிய தகவல்களளை கேள்விப்பட்டு, அப்பொழுதே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தோம்.ஆனால் அப்பொழுது எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, வாக்கெடுப்பு நடத்தி, இந்த அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
தற்பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் கனகராஜ் ஆகிய இருவரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக, ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய விடியோ பதிவில் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் இந்த அரசை காப்பாற்ற குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.
ஆனால் தற்பொழுது சரவணன் திரைப்பட காமெடி காட்சியில் வருவது போன்று , வீடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று கூறி வருகிறார். எனவே சரவணன் வீ டியோ குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.
அத்துடன் குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டும்
இவ்வாறு ஸ்டாலின் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.