முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ-க்களுக்குப் பணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் வழங்கிய

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:47 PM
பகிர்:

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிஐ, வருவாய் புலனாய்வு துறை விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்குரைஞர்கள் கே.பாலு, ரவி உள்ளிட்டோர் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கில் சட்டப்பேரவை செயலர் ஏ.எம்.பி ஜமாலுதின், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரிய மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இந்த இடைக்கால மனுவில் கோரப்பட்ட கோரிக்கை 'ரிட்' மனு விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டது.
எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று ஆட்சேபம் தெரிவித்ததோடு, இது குறித்து தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →