ஜாமீன் வேண்டுமா? சீமைக் கருவேல மரங்களை வெட்டுங்க: அரியலூர் நீதிபதியின் 'அடடே' உத்தரவு!
அரியலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவோர் அனைவரும் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை ...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவோர் அனைவரும் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. .
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் மரம் அகற்றும் பணியை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சீமைகருவேல மரங்களை பொதுமக்கள் தங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இப்பணியை மாவட்ட நீதிபதிகள், உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் இன்னும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட நீதிபதி ரகுமான் இன்று அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், அரியலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவோர் அனைவரும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குறிப்பாக 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
மேலும் அவ்வாறு மரங்களை அகற்றிய பிறகு அதற்கான சான்றினை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பெற்றுகே கொண்டு வந்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி ரகுமான் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.