தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு: மத்திய வேளாண் அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1,748.28 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
புது தில்லி: தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1,748.28 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சிக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.39,565 கோடி கேட்டிருந்த நிலையில், தமிழகத்தை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு ரூ.2,096 கோடி நிவாரணமாக வழங்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், மத்திய அரசு இன்று தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1,748.28 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியைச் சமாளிக்க நிவாரண நிதியாக ரூ.2,096 கோடி வழங்கலாம் என்று மத்திய வேளாண் துறைச் செயலர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை மீது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு இன்று கூடி முடிவு செய்தது.
தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக வறட்சி நிலவியது. அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் கருகின. கவலையில் ஏராளமான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த போதும், அவருக்கு அடுத்தபடியாக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வறட்சி நிவாரணத்துக்கு ரூ.39,565 கோடி அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, தமிழகத்தில் வறட்சி நிலைமையை மத்திய வேளாண் துறைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்தது.
இக்குழு கடந்த 9-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை அறிக்கையில், "தமிழகத்தின் வறட்சி நிவாரணத்துக்கு உடனடியாக ரூ.2,096 கோடி வழங்கலாம்' என்று கூறியுள்ளது.
இதேபோல, இந்தக் குழுவுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட துணைக் குழு, "தமிழக வறட்சி நிவாரணத்துக்கு ரூ.1,748 கோடி வழங்கலாம்' என்று கூறியுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.
இதில், தமிழகத்துக்கான வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிவிப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார். இந்த தொகை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆந்திர மாநிலத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.518.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.