டிடிவி தினகரன் தரப்புக்கு பலவீனமானால் ஓபிஎஸ் அணிக்கு அது பலம்தானே?
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டிடிவி தினகரன் தரப்பு, தங்களது போஸ்டர் மற்றும் பிரசாரத்தில் சசிகலா பற்றிய விஷயங்களை கவனமாக தவிர்த்து வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டிடிவி தினகரன் தரப்பு, தங்களது போஸ்டர் மற்றும் பிரசாரத்தில் சசிகலா பற்றிய விஷயங்களை கவனமாக தவிர்த்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் அணியில் அடிக்கப்படும் போஸ்டர்களில் சசிகலா படம் இடம்பெறுவதில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதும் அதனால் மக்கள் மத்தியில் சசிகலா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், தேர்தல் வெற்றியை பாதித்து விடக் கூடாது என்பதாலேயே புகைப்படம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
மற்றொரு வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவரை பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தினால், அதுவும் மக்கள் மனதில் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தலாம் என்று டிடிவி தினரகன் தரப்பு நினைக்கலாம்.
இதுபோன்ற காரணங்களால் டிடிவி தினகரன் தரப்பு சசிகலாவின் புகைப்படங்களை தவிர்த்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். சசிகலாவை தனது பலவீனமாக டிடிவி தினகரன் தரப்பு நினைக்கும்பட்சத்தில், அதனை தங்களது பலமாக பன்னீர்செல்வம் அணி கையில் பிடிக்கும் என்பது அரசியல் சாணக்கியம் தெரிந்த அனைவருமே அறிவர்.
இது ஒரு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது தொகுதியில் நடக்கும் தேர்தல் என்பதால், ஜெயலலிதாவுக்கு மாற்று சக்தியாக அவர்கள் எந்த அணியை நினைக்கிறார்கள் என்பதற்கான பதில் கிடைக்கும் என்பதால் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனால், பன்னீர்செல்வம் அணியினர், சசிகலாவையும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தங்களது பிரசாரத்தின் முக்கிய யுக்தியாக கை கொள்கிறார்கள்.
'ஆர்.கே.நகர் தொகுதியில் வெல்லப் போவது யார்? பணமா? அம்மா மீதுள்ள பாசமா?' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பன்னீர்செல்வம் தரப்பு பல இடங்களில் வைத்துள்ளனர். அதோடு, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்தது யார்? உண்மையில் நடந்தது என்ன?' என்பது போன்ற வாசகங்களும் டிடிவி தினகரன் அணிக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தவே செய்துள்ளது.