முகப்பு
தமிழ்நாடு

மின்னணு குடும்ப அட்டை: புகைப்படம் சரியில்லாதோர் விவரம் ரேஷன் கடைகளில் வெளியீடு

மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படங்கள் சரியில்லாதோர் குறித்த விவரங்கள் அந்தந்தப் பகுதி நியாய விலைக்கடைகளின் தகவல் பலகையில் வெளியிட்டுள்ளதாகவும் அதை குடும்ப அட்டைதாரர்கள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:28 PM
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையின் தகவல் பலகையில் இடம் பெற்றுள்ள புகைப்படம் சரியில்லாதோர் பற்றிய விவரங்கள்.
பகிர்:

மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படங்கள் சரியில்லாதோர் குறித்த விவரங்கள் அந்தந்தப் பகுதி நியாய விலைக்கடைகளின் தகவல் பலகையில் வெளியிட்டுள்ளதாகவும் அதை குடும்ப அட்டைதாரர்கள் பார்வையிட்டு சரி செய்து கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 33,222 நியாய விலைக்கடைகள் மூலம் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்காமல் உள்தாள் இணைப்புகளுடன் நைந்து போன நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தக் குடும்ப அட்டைகள் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் பொருள்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைக்கும் நோக்கத்திலேயே பழைய அட்டைகளுக்குப் பதிலாக, புதிதாக குடும்ப மின்னணு அட்டைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலும் ஆதார் அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தையே மின்னணு குடும்ப அட்டைகளில் பதிவேற்றம் செய்கின்றனர். இதுபோல் செய்வதன் மூலம் புகைப்படம் தெளிவின்றியும், மாறியும் அச்சிட்டு வழங்கியதாக குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தது.
இதன் அடிப்படையில் அச்சிட்ட குடும்ப அட்டைகளில் ஒவ்வொருவரின் விவரங்களும் சரியாக இடம் பெற்றுள்ளனவா என்பதைப் பார்த்து வழங்குவதற்கான பணியில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே புகைப்படம் சரியில்லாதோர் விவரங்கள் அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதை குடும்ப அட்டைதாரர்கள் பார்த்து உடனே தங்களின் தெளிவான புகைப்படங்களை அருகில் அரசு இ சேவை மையங்களுக்குச் சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
சரியான விவரங்களுடன் கூடிய மின்னணு குடும்ப அட்டைகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →