முகப்பு
தமிழ்நாடு

புதிய விதிகளுக்கு உட்பட்டு பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி: உயர் நீதிமன்றம்

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உட்பட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி வழங்கி சென்னை

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உட்பட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விவசாய விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக "லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த விதக் காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்.9 ஆம் தேதி தடை விதித்தது.
இத்தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், சங்கங்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி, தமிழக அரசு இரண்டு அரசாணைகளைப் பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் கொண்டு வந்துள்ள இந்த இரண்டு அரசாணைகளும் அரசிதழிலில் (மே 4) வெளியிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை காலத்தில் 9,760 பத்திரங்கள் பதிவுகள் செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாலை வரை நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, கடந்தாண்டு செப்டம்பர் 9 முதல் நிகழாண்டு மார்ச் 28-ஆம் தேதி வரை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 12-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லா வீட்டு மனைகள் சட்ட விரோதமானது, அவை செல்லாது.
அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உட்பட்டு, இடைக்காலமாக பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குகிறோம்.
இந்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளும் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →