நாகை மாவட்டத்தில் 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கம்
நாகை மாவட்டத்தில் நீடித்து வரும் தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கமடைந்திருந்தது.
நாகை மாவட்டத்தில் நீடித்து வரும் தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கமடைந்திருந்தது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நிலைபெற்றுள்ளது.
இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மற்றும் மிதமான மழை நீடித்து வருகிறது.
வானிலை மாற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
கடல் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாலும், கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 அடி உயரத்தில் எழும்புவதாலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு உகந்த சூழல் இல்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, தொடர்ந்து 4-ஆம் நாளாக வியாழக்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான நூலிழைப் படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை என மீனவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 நாள்களாக மீன்பிடிப்பு இல்லாததன் காரணமாக, நாகை மாவட்டத்தில் மீன் உணவுத் தேவையில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் மீன் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.