மணல் குவாரிகள் கடந்து வந்த பாதை!
தமிழகத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரவருணி ஆகிய ஆற்றுப்படுகைகள் மணல் குவாரிகளின் புகலிடமாக விளங்குகின்றன.
தமிழகத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரவருணி ஆகிய ஆற்றுப்படுகைகள் மணல் குவாரிகளின் புகலிடமாக விளங்குகின்றன.
காவிரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தமிழகத்தில் காவிரியாய் பெருக்கெடுத்துச் செல்கிறது. திருச்சி, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் காவிரி வந்து செல்லும் பகுதிகளில் மணல் குவாரிகள் பரந்து விரிந்துள்ளன.
பாலாறு: கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சேலம்,தருமபுரி, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை,காஞ்சிபுரம், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை ஆகியவை பாலாற்றின் கரைப்பகுதிகளாக உள்ளன.
இந்த கரைப்பகுதிகளில்தான் மணல்குவாரிகள் உள்ளன. வெள்ளப்பெருக்கின் போது அடித்து வரும் மணல், முழுமையாக பாலாறு வனப்பகுதி காவிரியாற்றில் படிகிறது.
தென்பெண்ணை: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி, கர்நாடகம், தமிழகத்தில் 391 கிமீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று மணல் குவாரிகள் அமைந்துள்ளன.
தாமிரவருணி: மேற்குத்தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தாமிரவருணி செல்லும் பகுதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மணல் குவாரிகள்உள்ளன. இதுமட்டுமல்லாது நாகர்கோவிலில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் குவாரிகள் உள்ளன.
குவாரிகள் வரலாறு: தமிழக ஆற்றுப்படுகைகளில் 1990-ஆம் ஆண்டுக்கு முன் மண்வெட்டியால் மணல் வெட்டி எடுக்கப்பட்டு மாட்டு வண்டி, கைகளால் இழுக்கப்படும் கட்டை வண்டி, லாரிகள் மூலம் மணல் எடுக்கப்பட்டது. 1990-க்கு பிறகு ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அதிகளவு மணல் எடுக்கத் தொடங்கினர். தமிழகத்தில் 35 முதல் 50 குவாரிகள் வரை அரசு அனுமதியுடன் இயங்கின. இருப்பினும், பல இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மணல் சாம்ராஜ்யமே நடைபெற்றது.
அரசு வசமான குவாரிகள்: ஏலம் எடுக்கப்பட்ட குவாரிகளில் விதிமுறை மீறல்கள்,, குத்தகைதாரர்களின் மீதான புகார்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்லவே நிபுணர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அந்தக் குழு, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம் என பரிந்துரை செய்தது. இதனையேற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குவாரிகளை அரசு கையகப்படுத்த உத்தரவிட்டார். இதன்படி, குத்தகை அடிப்படையில், தனியாரால் ஏலம் எடுத்து நடந்து வந்த மணல் குவாரிகள், 2003-ம் ஆண்டில் அரசு வசமானது.
பொதுப்பணித் துறை சார்பில் மணல் நேரடியாக விற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் இதனைக் கண்காணித்தனர். ஆனால், இது சில மாதங்களே நீடித்தது.
ஏகபோக அதிகாரம்: சில மாதங்களுக்கு பின்னர் லிஃப்டிங் அண்ட் லோடிங் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தனியார் உள்ளே நுழைந்தனர். குத்தகை எடுக்கும்போது தமிழகம் முழுவதும் பரவலாக சிதறிக் கிடந்த மணல் அதிகாரம், லிஃப்டிங் கான்ட்ராக்ட் எனும் பெயரில் ஒரே நபரிடம் வழங்கப்பட்டது. குவாரிகளில் இருந்து மணல் எடுப்பது, அதை லாரிகளில் கொண்டுசெல்வதுதான் இந்த லிஃப்டிங் கான்ட்ராக்டர்களின் வேலை. மணல் தேவைப்படுபவர்கள், இவர்களை நாட வேண்டும் என்ற நிலை உருவானது. அரசு அனுமதித்த 1 மீட்டர் முதல் 2மீட்டர் ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், எந்தவிதிமுறைகளையும் மணல் அதிகாரம் பின்பற்றுவதில்லை. இதனால்,தமிழகத்தின் ஆற்று வளமான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாரமிரவருணி வளம் சுரண்டப்பட்டு பாலைவனமானது. வேளாண்மை கேள்விக்குறியானது.
பசுமைத்தீர்ப்பாயம் அதிரடி: கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் குவாரிகளுக்கு கடிவாளம் இட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அதிகாரம் படைத்த குழுக்களை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை முறைப்படுத்தும் சட்டத்தைக் கடந்த 2015 டிசம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்றால், மாநில அளவிலான, மாவட்ட அளவிலான இந்தக் குழுக்களிடம் அனுமதி பெற வேண்டும்.
தமிழக குழு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அதிகாரம் படைத்த குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு மணல் அதிகாரம் படைத்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்தது. குழுவின் தலைவராக இருந்தவர் வீடும் சோதனையில் தப்பவில்லை. இதையடுத்து மாநிலக்குழு செயலிழந்தது. மாவட்ட அளவில் குழுக்களை அமைக்கவே இல்லை. இந்தச் சூழலில் பெரும்பாலான கிரானைட் குவாரிகள், மணல் குவாரிகளுக்கான லீஸ் முடிந்துததால் அவை மூடப்பட்டன.
இப்போதைய நிலை: தமிழகத்தில் 21 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் 7 ஆயிரம் யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. தமிழக முதல்வர் புதிதாக 70 குவாரிகளை திறப்பதாக அறிவித்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது 6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.