கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு: வைகோ வலியுறுத்தல்
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு அந்த மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு அந்த மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலம் மைசூரில் நடிகர் விஜய் நடித்த "மெர்சல்' திரைப்படத்தை திரையிடவிடாமல் கன்னட அமைப்பினர் தடுத்ததுடன், படம் பார்க்க வந்த தமிழர்களையும் விரட்டியடித்துள்ளனர். மேலும், கன்னடர் ஒருவரை தமிழர் தாக்குவதுபோல பொய்யான விடியோவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பச் செய்து, வன்முறையைத் தூண்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்களை திரையிடக்கூடாது, 1991-இல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதுபோல் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இத்தகைய சூழலில், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.