வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: குமரிக் கடல் முதல் மன்னார் வளைகுடா வரை 3.1 கி.மீ. தொலைவில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
வாணியம்பாடியில் 60 மி.மீ... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில்யும் மழை தொடர்ந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 50 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், போச்சம்பள்ளி, சோளிங்கரில் தலா 40 மி.மீ.பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், காட்டுமன்னார்கோயில், திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை, தளி, அரியலூரில் தலா 30 மி.மீ., அரக்கோணம், ஆலங்காயம், ஈரோடு மாவட்டம் தாளவாடி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தலா 20 மி.மீ. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தலா 10 மி.மீ. மழை பதிவானது.