முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் பதவியேற்பு செல்லாதென அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது செல்லாதென அறிவிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது செல்லாதென அறிவிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக ஆகஸ்ட் 21 -ஆம் தேதி பதவியேற்றார். இதனை எதிர்த்து வழக்குரைஞர் இளங்கோவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்புச் சட்டப்படி, அமைச்சர் என்று கூறிதான் பதவியேற்க வேண்டும். ஆனால் பன்னீர்செல்வம் 'துணை முதலமைச்சராக' எனக் கூறி பதவியேற்றார். இதன் மூலம் அவர் அமைச்சராக பொறுப்பு வகிக்க சட்டபூர்வமாக தகுதியற்றவர் ஆகின்றார். எனவே எந்தத் தகுதியின் அடிப்படையில் அவர் துணை முதல்வராக பதவியில் நீடிக்கின்றார் என விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், 'தமிழகத்தில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பதவி என்பது இல்லை, எனவே, இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞர், 'துணை பிரதமர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றமும் , துணை முதல்வர் பதவியை எதிர்த்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. எனவே அந்த தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். 
இதையேற்று கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →