முகப்பு
தமிழ்நாடு

ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள்: கெஜ்ரிவால் சந்திப்புக்குப் பின்னர் கமல் பேட்டி!

ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை என்று தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

சென்னை: ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை என்று தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சமீப காலமாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பல்வேறு அரசியல் விமர்சனங்களை வைத்து  வருகிறார். அதுவும் ஆளும்கட்சியான அதிமுக மீது அவரது விமர்சனங்கள் கூர்மையாகத் தொடர்கிறது.

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்காக இன்று தமிழகம் வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி இன்று மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அங்கிருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்திற்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

அங்கு கமல்ஹாசனை கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. புகைப்படக்காரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த உறவும் தொடர்கிறது. கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருபவர். அவரிடம் இருந்து பல விசயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

தனிப்பட்ட முறையில், நடிகர் என்ற வகையிலும் நல்ல மனிதர் என்ற முறையிலும் கமல்ஹாசனுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நாட்டின் தற்போதைய நிலை குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். நாடு ஊழலாலும், மதவாதத்தாலும் பாதிப்படைந்துள்ளது. நாட்டில் மதவாதத்திற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கமலும் அப்படிப்பட்ட கருத்து உடைய ஒருவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும்.

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →