தொலைந்து போகும் ஆவணங்கள்: இணையதளத்தில் புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடக்கம்
தமிழகத்தில் கடவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலையும் பட்சத்தில் காவல்துறையின் இணையதளம் மூலம் புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கடவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலையும் பட்சத்தில் காவல்துறையின் இணையதளம் மூலம் புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.
தமிழக காவல்துறையை கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கெனவே முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, குற்றங்களில் சிக்கும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிவது உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆள்கள் காணாமல் போதல், அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் காவல்துறை இணைய தளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக ஆவணங்கள் காணாமல் போகும் புகார்களை அளிப்பதற்கும் காவல்துறை இணையதளத்தில் வசதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ்கள், வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் பங்கு பத்திர ஆவணங்கள், ரேஷன்கார்டு உள்ளிட்டவை காணாமல் போகும் பட்சத்தில் தமிழகக் காவல்துறையின் இணையதளத்துக்குச் சென்று ஆவணங்கள் மாயமானது தொடர்பான உட்பிரிவுக்குச் சென்று புகார்களைப் பதிவு செய்யமுடியும். இதற்கு அரசு அளித்துள்ள ஏதேனும் அடையாள சான்றைக்கொண்டு புகார் அளிக்கும்போது, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பெறமுடியும்.
Advertisement
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கடவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ் ஆகியவை தொலைந்து விட்டால் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் கடினமாக இருப்பதால் பொதுமக்கள்அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை அளிக்கப்படுவது இல்லை. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள்அவதியவடைவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன்பேரில் நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இணையதள புகார் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆக.30-ஆம் தேதி முதல் செயல்பட உள்ள இந்த வசிதியை தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். மேலும் தமிழகத்துக்குள் ஆவணங்கள் தொலைந்திருந்தால் மட்டுமே இதில் புகார் அளிக்க முடியும் என்றனர்.