முகப்பு
தமிழ்நாடு

மேச்சேரி அருகே பொட்டனேரி கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழைமையான சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான- கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொல்லியல் துறையினர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:00 AM
பகிர்:

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான- கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொல்லியல் துறையினர் இதனைப் பாதுகாப்பாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த சமண ஆர்வலர் அ. ஸ்ரீதரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக மக்கள் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய நெறிகளைப் பன்னெடுங் காலமாய் பின்பற்றி வந்துள்ளனர். சங்க காலத்தில் இருந்தே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஜைனர்கள் எனப்படும் சமணர்கள் தமிழகம் முழுக்க வாழ்ந்துள்ளனர்.
நன்னூல், சீவக சிந்தாமணி உள்ளிட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், கணிதம், வானியல் எனப் பல துறைகளிலும் சமணத் துறவிகள் நூல்களைப் படைத்து உள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான பிராமி கல்வெட்டுத் தகவல்களில் பெரும் பகுதி சமணம் சார்ந்தவையே. சமண முனிவர்கள் மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அறப் பணிகள் செய்ததற்கான தடயங்கள் இன்றும் தமிழகம் முழுக்க பல்வேறு மலைகளில் சான்றுகளாக உள்ளன.
இந்த வகையில் 1,200 ஆண்டுகள் தொன்மையான கருங்கல்லில் வடிக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரர் சிலையொன்று சேலம் மாவட்டம், மேச்சேரிக்கு அருகிலுள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் முற்றிலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இங்குள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு அருகில் வயல் வெளியில் மரத்தின் அடியில் உள்ள இச் சிற்பத்தை ஆய்வாளர்கள் திருக்கழுக்குன்றம் ஜீவா, ரவிதாஸ் ஆகியோருடன் ஆய்வு செய்தோம்.
தீர்த்தங்கரர் உருவங்களின் தலைக்கு மேல் உள்ள முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர் முகம் மட்டுமின்றி, சிற்பம் முழுவதும் தேய்ந்த நிலையில் உள்ளது. சாமரதாரிகள், இயக்கன், இயக்கியர் உருவங்களும் இணைந்தே உள்ளன.
அர்த்தப்பரியங்காசன தியான நிலையுடன் திருவுருவம் சிம்ம ஆசனத்துக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. இளம்பச்சை நிறக் கல்லிலான இந்தச் சிற்பம் பின்பகுதியில் பார்க்கும்போதும் தியான நிலையில் அமர்ந்து இருப்பதுபோல அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபிஷேக மேடையுடன் காணப்படும் இச் சிற்பம் உள்ள பகுதியில் சமண ஆலயம் இருந்து அழிந்திருக்கலாம். தற்போது இப் பகுதியில் சமணர்கள் எவரும் இல்லை.
தொன்மையான தமிழர் கலாசாரத்தின் எச்சங்களாக உள்ள இத்தகைய சமணச் சிற்பங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உருவாக்க வேண்டும். சிறிய அளவில் மேடையுடன் பாதுகாப்பிடம் எழுப்பி வரலாற்றுத் தகவல்களுடன் அறிவிப்புப் பலகைகளை தொல்லியல் துறை அமைக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பு மேடைகளில் நான்கு பக்கமும் தீர்த்தங்கரர் குறிப்பிட்ட வாழ்வியல் நெறிகளை விளக்க வேண்டும் என்றார் ஸ்ரீதரன்.

முழு கட்டுரையைப் படிக்க →