கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சக்கரபாணி, தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு, மார்ச் 5-ஆம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர், தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே சங்கப் பதவிகளுக்கு தேர்வு செய்து வருகின்றனர். பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே, முதல்கட்டத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியினர் மீது பல முறைகேடு புகார்கள் வந்த போதிலும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திண்டுக்கலில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பால் இரண்டாம் கட்டத் தேர்தல் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், திண்டுக்கல், பழனியில் மூன்று மற்றும் நான்காம் கட்டத் தேர்தலுக்கு தடை விதிக்கவும், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த விவரங்களை கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.