'செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன'
சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிண்டி சிறுவர் பூங்கா வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உயிர்ப்பன்மை, பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சிற்றாமை இனங்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிடுகின்றன. கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில் 22,612 முட்டைகள் செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15,988 கடல் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. மேலும், கடல் ஆமைகள், அதன் முட்டைகளைப் பாதுகாக்கும் விதமாக கடல் ஆமைகளை விலக்கும் கருவிகளை இழுவை வலைகளில் பொருத்த மீனவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.