திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1997ஆம் ஆண்டு உதகை மலர்க்காட்சி தொடக்க விழாவுக்கு வந்திருந்ததே உதகையில் அவர்நீலகிரி மாவட்டத்தில் பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சியாகும்.
திமுக தலைவரான கருணாநிதி ஆட்சியிலிருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் நீலகிரி மாவட்டத்துடனான அவரது தொடர்பு மட்டும் தொடர்ந்து வந்தது. கடந்த 1996ஆம் ஆண்டில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற உதகை மலர்க்காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாளுடன், அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அரசினர் தாவரவியல் பூங்கா இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக ஒரு பூங்காவை நகருக்கு வெளியே அமைக்க வேண்டியது அவசியம் என்று முதல்வர் கருதுவதாகத் தெரிவித்தார்.
இந்த விழாதான் கருணாநிதி உதகையில் அரசு முறையில் பங்கேற்ற கடைசி விழாவாகும். 2001இல் ஆட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் 2004ஆம் ஆண்டில் கண்ணம்மா திரைப்படத்துக்கு வசனம் எழுதுவதற்காக கோத்தகிரியிலுள்ள ராப்ராய் எஸ்டேட் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் கோத்தகிரியிலிருந்து தொட்டபெட்டா மலைச்சிகரம் வந்த கருணாநிதி அங்கிருந்து உதகை நகருக்குள் வராமல் அப்படியே கோத்தகிரி திரும்பி விட்டார்.