முகப்பு
தமிழ்நாடு

கருணை காட்டாத கஜா புயல்: தமிழக ஆசிரியரின் பெருந்தன்மையான முடிவு

கனவு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றிருக்கும் தமிழக ஆசிரியர், மீண்டும் ஒரு முறை அந்த விருதுக்கு தான் தகுதியானவரே என்று நிரூபித்துள்ளார்.

Updated On : 8 டிசம்பர், 2018 at 12:42 PM
file photo
பகிர்:


கரூர்: கனவு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றிருக்கும் தமிழக ஆசிரியர், மீண்டும் ஒரு முறை அந்த விருதுக்கு தான் தகுதியானவரே என்று நிரூபித்துள்ளார்.

ஒரே ஒருவருக்கு உதவி செய்து விடுவதால், உலகமே மாறிவிடாது. ஆனால், உதவி பெற்ற அந்த ஒருவரின் உலகமே மாறிவிடும். இதனை நிரூபித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.

மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வந்த மூதாட்டி, கஜா புயலால் வீடிழந்து தெருவில் தவித்து வந்தார். அவரை தத்தெடுத்து, புது வாழ்வு அளித்துள்ளார் அந்த கனவு ஆசிரியர்.

Advertisement

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மருதவனத்தில் ஒரு சிறிய குடிசையையே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்தார் 75 வயது பாக்கியம். 5 மகன்கள் இருந்தும் அனைவரும் கைவிட்ட நிலையில், அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தனியாக வசித்து வந்தார்.

டெல்டா பகுதிகளை கருணையே இல்லாமல் தாக்கிய கஜா புயல், மூதாட்டியைக் கைவிட்ட மகன்களை விட மிக மோசமாக நடந்து கொண்டது. ஆம் அவரது குடிசையைப் பந்தாடிச் சென்றது.

ஏற்கனவே வாழ்விழந்து தற்போது வீடிழந்து, செய்வதறியாது இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் தேற்றி தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

இந்த பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்வதில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பூபதி, இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்து ஒரு முடிவை எடுத்தார். அதுதான் அவரை தானே தத்தெடுத்து பராமரிப்பது என்று.

உடனடியாக பூபதி தனது மனைவி பிருந்தாவுடன் நேராக மூதாட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று அவருக்குத் தேவையான ஆடை, சாமான்கள் எல்லாம் கொடுத்து, அவரது வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

தனது கையைப் பிடித்துக் கொண்ட பாக்கியம் அம்மாள், கண்களில் கண்ணீர் தளும்ப பேசினார். எனக்கு 5 பிள்ளைகள் இருந்தும் கைவிட்டுவிட்டன. யார் என்றே தெரியாத தங்கள் உதவி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது அவரிடம் நான் ஒரு உறுதி அளித்தேன். இன்று மட்டுமல்ல, உங்களது இறுதிக் காலம் வரை உங்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன். இனி மாதந்தோறும் அவர் வாழ்வதற்குத் தேவையான பணத்தை அனுப்பிவிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் நான் எனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக எண்ணுகிறேன் என்று பெருமிதத்தோடு கூறினார்.

இதை ஒரு சாதாரண செய்தியாக நினைக்காமல், நமக்கான ஒரு முன்னுதாரணமாக எண்ணினால் இதுபோன்று பலருக்கும் புதிய உலகம் பிறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.