எய்ட்ஸ் இருப்பதாக தவறான அறிக்கை கொடுத்த மருத்துவமனைக்கு அபராதம்
பணி நிமித்தமாக மருத்துவ அறிக்கை கோரிய நபருக்கு எச்ஐவி நோய் இருப்பதாக தவறான அறிக்கைக் கொடுத்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை: பணி நிமித்தமாக மருத்துவ அறிக்கை கோரிய நபருக்கு எச்ஐவி நோய் இருப்பதாக தவறான அறிக்கைக் கொடுத்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜிஃப்ரிக் அலி என்பவருக்கு மற்ற 3 மருத்துவ மையங்களில் எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில் எச்ஐவி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எச்ஐவி நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கொடுத்த மருத்துவமனைக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்பாயம் அபராதம் விதித்தது.
மருத்துவமனை கொடுத்த தவறான அறிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான ஜிஃப்ரிக் அலிக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக அளிக்குமாறு ஹுமா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் பணி வாய்ப்புப் பெற மருத்துவ சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக, இந்த மருத்துவமனைக்கு ஜிஃப்ரிக் சென்றுள்ளார். அப்போது அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவமனை, அவருக்கு எச்ஐவி நோய் இருப்பதாக அறிக்கை அளித்தது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜிஃப்ரிக், சென்னை மருத்துவக் கல்லூரியில் இயங்கும் தேசிய எச்ஐவி ரெஃபரன்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனை செய்து கொண்டார். அனைத்திலும் அவருக்கு எச்ஐவி இல்லை என்றே வந்தது.
இதையடுத்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய மருத்துவமனை ரூ.10 லட்சம் அபராதம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாடினார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இயங்கும் பரிசோதனைக் கூடம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.