என் பாணி வேறு; அவர் பாணி வேறு: கமல் சந்திப்பு பற்றி ரஜினி பேட்டி!
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி; என் பாணி வேறு; அவர் பாணி வேறு என்று கமலுடனான சந்திப்பு பற்றி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி; என் பாணி வேறு; அவர் பாணி வேறு என்று கமலுடனான சந்திப்பு பற்றி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல அரசியல் பிரவேசத்தினை அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் நியமனம் , கூட்டங்கள் என்று தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஞாயிறு மதியம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் 'திடீர்' சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியாதவது:
விரைவில் தனது அரசியல் பயணத்தை துவங்க உள்ள நண்பர் கமல்ஹாசன் அதற்காக எனக்கு அழைப்பு விடுக்க வந்திருந்தார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
கமல் அவர்கள் பெயருக்காகவோ, பணத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார். அவரது வெற்றிக்கு ஆண்டவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.
சினிமாவிலேயே எனது பாணி வேறு, அவரது பாணி வேறு; அதேபோல அரசியலிலும் என்னுடைய பாணியும் அவரது பாணியும் வேறு வேறாகத்தான் இருக்கும், ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும் இருவருடைய பொதுவான இலக்காக இருக்கும்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.