லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியர் பணியிடை நீக்கம்
லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை உத்தரவிட்டார். பிணை கோரி வட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம்
லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை உத்தரவிட்டார். பிணை கோரி வட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருக்குச் சொந்தமான மணல் லாரியை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் (43) கடந்த 17ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அவரிடம் நேரில் விசாரணை நடத்திய பரமத்தி குற்றவியல் நீதிமன்ற நடுவர் தனபால், அவரை மார்ச் மாதம் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து வட்டாட்சியர் தரப்பில் பிணை கேட்டு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பழனிசாமி, வட்டாட்சியர் தரப்பில் வழக்குரைஞர் கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கருணாநிதி, பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர். ஆட்சியர் மு.ஆசியா மரியம், அவர்களது பரிந்துரையை ஏற்று, வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.