பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 பேர் பாரம்பரிய முறைப்படியும், முடி காணிக்கை செலுத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
நியூயார்க் நகரில் உள்ள ராட்ச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக இருப்பவர் டக்ளஸ் புரூஸ். இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தனது துறை மாணவர்களுடன் பழனி வந்துள்ளார். அத்தோடு பழனி முருகனின் தீவிர பக்தராகவும் மாறிவிட்டார். இதனால் தனது பெயரை அழகு தமிழில் சுந்தரமூர்த்தி எனவும் மாற்றியுள்ளார்.
இந்நிலையில் 11-ஆவது ஆண்டாக தனது துறையை சேர்ந்த அமெரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மாணவர்கள் 20 பேருடன் டக்ளஸ் புரூஸ் புதன்கிழமை பழனி மலைக்கோயிலுக்கு வந்தார். அங்கு அவர்கள் உச்சிக்காலத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.
இவர்களை அழைத்து வந்த ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத்பாபு கூறியது: வருடம்தோறும் பேராசிரியர் டக்ளஸ் புரூஸ் தலைமையில் வரும் மாணவர்கள் பதினைந்து நாள்களில் அறுபடை வீடுகளையும், பஞ்சபூத ஸ்தலங்களையும் தரிசனம் செய்வார்கள். பழனி மலைக்கோயிலுக்கு படிவழியாகவே வந்து படிவழியாகவே இறங்குவார்கள். புண்ணிய யாத்திரையாக வரும் இவர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, ரவிக்கை, வேட்டி, துண்டு அணிந்தே வருகின்றனர். அனைவரும் முருகனின் உச்சாடனத்தை சொல்லி சுவாமி கும்பிடுகிறார்கள். அதில் பலருக்கும் தமிழ்ப்பெயர் உண்டு. சிலருக்கு தமிழ்ப்பெயர் வைக்க அதற்கான நாமகரணம் சூட்டுவோர் அமெரிக்காவில் இல்லாததால் அவர்கள் இன்னும் பெயர் மாற்றவில்லை. கேத் என்பவர் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். நிறைவாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் யாகபூஜை நடத்திவிட்டு அமெரிக்கா திரும்புகின்றனர் என தெரிவித்தார். பேராசிரியர் டக்ளஸ் புரூஸ் தமிழில் கூறியது: பழனி கோயிலுக்கு வந்து சென்றாலே ஒரு நிம்மதி கிடைக்கிறது. அடுத்து எப்போது தமிழ்நாடு வருவோம் என தோன்றுகிறது. இங்கு திருநீறு, பஞ்சாமிர்தம், சுவாமி படத்தை கட்டாயமாக வாங்கி செல்கிறோம் என தெரிவித்தார்.