ஆறு மாத சிறைவாசத்திற்குப் பின் தமிழகம் திரும்பிய முன்னாள் நீதிபதி கர்ணன்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைவாசம் அனுபவித்த ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வியாழன் அன்று தமிழகம் திரும்பினார்.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைவாசம் அனுபவித்த ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வியாழன் அன்று தமிழகம் திரும்பினார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சி.எஸ்.கர்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய பொழுது, சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து அவதூறு புகார்கள் தெரிவிதது வந்தார். இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது .
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்து எதிர் உத்தரவுகளை பிறப்பித்த காரணத்தால் அவரைக் கைது செய்து ஆஜர் படுத்தும் படி, 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது.இதன் காரணமாக நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அப்பொழுதே அவருக்கு 62 வயது பூர்த்தியானதால், தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
Advertisement
அவரைத் தேடி கொல்கத்தா போலீஸார் தமிழகத்தில் முகாமிட்டனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கர்ணன் கடந்த ஜூன் மாதம் கோவையில் பண்ணை வீடு ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனை முடிந்து கடந்த டிசம்பர் 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் வியாழன்று தமிழகம் திரும்பியுள்ளார். தனியார் விமானம் மூலம் அவர் சென்னை திரும்பியுள்ளார்.