எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள்விழாவில், கன்னட மொழியில் எழுதப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூலை முன்னாள்
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள்விழாவில், கன்னட மொழியில் எழுதப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூலை முன்னாள் பிரதமர் எச்.டி. தேவெகெளடா வெளியிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் விழா கர்நாடக மாநில அதிமுக சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எம்ஜிஆர் மணி, ஏ.அருண், கே.ஏ.பழனி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஏழுமலை வரவேற்றார்.
விழாவில் மனிதநேய அறக்கட்டளை நிறுவனரும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி பங்கேற்று, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, எம்ஜிஆரின் தத்துவப் பாடல்களின் கன்னட மொழி இசைத்தட்டு, கே.ஆர்.கிருஷ்ணராஜ் எழுதிய பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று கன்னடநூல், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைப்புரட்சி என்ற தலைப்பில் 5 மொழிகளில் எழுதப்பட்டுள்ள நூல் ஆகியவற்றை முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி. தேவெகெளடா வெளியிட்டார். இதன்பின்னர், போட்டியில் கலந்துகொண்ட 101 குழந்தைகளுக்கும் பரிசுகளை தேவெ கெளடா வழங்கினார்.
விழாவில் நடிகை செளகார் ஜானகி, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், எம்எல்ஏ உதய் கருடாச்சார், எம்எல்சி டி.ஏ.சரவணா, மதுரை முன்னாள் மேயர் எஸ்.நவநீதகிருஷ்ணன், எஸ்.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் வேடமணிந்தவர்களுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நடுவர்களாக எம்ஜிஆரின் உடையலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி துரைகருணா ஆகியோர் இருந்தனர்.