ராமநாத சுவாமி கோயில் தூண்களின் உறுதித்தன்மை: ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகார தூண்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகார தூண்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மூன்று பிரகாரங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சிவன் ஆலயம்.
இதில் முதல் பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரம் மட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் பிரகாரம் கடந்த 400 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 1948 ஆம் ஆண்டு இரண்டாம் பிரகாரத் திருப்பணிகள் தொடங்கியது. ஆனால், பணிகள் முற்றிலும் முழுமை பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து மீண்டும் இரண்டாம் பிரகாரத்தில் திருப்பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் பிரகாரத்தின் தூண்களின் உறுதித்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி-யில் இயங்கி வரும் பாரம்பரிய மையங்களின் பாதுகாப்புக்கான தேசிய மையத்தின் சார்பில் நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், கோயில்கள், வரலாற்று கட்டமைப்புகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த சென்னை ஐ.ஐ.டி-யின் முதுநிலை திட்ட அலுவலர் கற்பகம் தலைமையில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப பொறியாளர்கள் தூண்களின் உறுதித் தன்மை குறித்து நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து முழுமையான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டு பின்னர் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.