நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா வரும் வியாழக்கிழமை (ஆக. 2) தொடங்குகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் கொல்லிமலை வாழவந்தி நாடு, செம்மேட்டிலுள்ள வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழாவும், சுற்றுலா விழாவும் மற்றும் வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்படவுள்ள மலர்க் கண்காட்சி துவக்க விழாவும் நடைபெறவுள்ளன.
வல்வில் ஓரி விழாவின் தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 10 மணியளவில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வல்வில் ஓரி விழாவில் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை பல்வேறு கலைக் குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு அரசு சார்பில் இயற்கை அன்னையின் கொடையான, மூலிகை மலையான கொல்லிமலையில் நடைபெறும் விழாவில் பொது மக்கள் பங்கேற்க வசதியாக வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.