ஐபிஎல் விவகாரம்: அமலாக்கத் துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்திய விவகாரம் குறித்து 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட
தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்திய விவகாரம் குறித்து 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை அந்த நாட்டு அமைப்புடன் இணைந்து நடத்த, இந்திய கிரிக்கெட் வாரியம் 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. இப்போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கடந்த 2015 -ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து சீனிவாசன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நடந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தென்னாப்பிரிக்காவில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன' எனத் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.