கோவை பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கோவை பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், நீலகிரி மாவட்டம் குந்தா அணையில் இருந்து பில்லூர் அணைக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
100 அடி அளவு கொண்ட பில்லூர் அணையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 85 அடி தண்ணீர் இருந்தது. இன்று காலை 94 அடியாக தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.