முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை மூட முறையான அரசாணை வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்றம் 

ஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை ரீதியில் முடிவு எடுத்து அரசாணை வெளியிடுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 13 ஜூன், 2018 at 2:02 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:06 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் நடைபெற்ற போராட்டம் கடைசி நாளில் வன்முறையாக மாறி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு அந்த ஆலைக்கு செல்லும் குடிநீர், மின்சார விநியோகம் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டது. 

இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டப்பேரைவியில் தீர்மானம் கொண்டுவந்து அரசாணை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தனர். 

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 15 வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், மதிமுக பொதுச் செயலாளர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வைகோ தொடுத்திருந்த வழக்கும் ஒன்று. 

Advertisement

இந்த வழக்குகளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாசுகட்டுப்பாடு அறிக்கையை வைத்து வெளியிட்ட அரசாணை தெளிவாக இல்லை. அது த்ருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை ரீதியில் முடிவு எடுத்து அரசாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது என்று தமிழக அரசு சார்பில் தெரிவித்த போது மனித உயிருக்கு மதிப்பு 20 லட்சம் தானா? மனித உயிர் விலைமதிப்பற்றது. நிவாரணம் மூலம் மனித உயிர்களை மதிப்பிட முடியாது என்று நீதிபதிகள் பஷீர் அகமது மற்றும் செல்வம் தெரிவித்தனர்.    

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.