முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடக்கம்
குமாரபாளையத்தில் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையத்தில் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மரபு மையம், தமிழ்மரபு அறக்கட்டளை (உலகலாவிய அமைப்பு), தமிழக அரசின் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வியலும் எனும் தலைப்பிலான இம் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.மதிவாணன் தலைமை வகித்தார்.
மாநாட்டின் தொடக்கமாக சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 15 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், உலகத் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் சுபாஷிணி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.கற்பூரபாண்டியன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், தொழிலதிபர் எம்எஸ் குமணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இம் மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் தமிழ் வளர்ச்சி குறித்துப் பேசினர். பாரம்பரிய தமிழ் சித்த மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது. இரண்டாவது நாள் மாநாடு வெள்ளிக்கிழமை (மார்ச் 2), தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (மார்ச்3) நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.