உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை
மாணவர்கள் உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தினார்.
மாணவர்கள் உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தினார்.
மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளம் மாணவர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்களாகத் திகழ்கிறார்கள். நாங்கள் 40 வயதில் பெற்ற அறிவை இன்றைய மாணவர்கள் 20 வயதில் பெறுகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சி உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் ஆற்றலை உங்களுக்குத் தந்துள்ளது. அறிவைப் பெறும் அவசரத்தில் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த பண்பாட்டைத் தொலைத்து விடக் கூடாது. அறிவு கூர்மையாக இருக்கும்போது பண்பாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எவ்வளவு கூர்மையானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுவோராகவும் உள்ளனர்.
பத்திரிகை, தொலைக்காட்சியில் வரும் மாணவ, மாணவியரின் தற்கொலை செய்திகள் என்னை துடிதுடிக்கச் செய்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவைத் தேடுவது ஒட்டுமொத்த மனித வளத்துக்கும் இழுக்கு என்றார் வைரமுத்து.
இதைத்தொடர்ந்து, சாய்ராம் கல்விக் குழுமம் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை கல்வி அறக்கட்டளை தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் ஆகியோர் வைரமுத்துவிடம் வழங்கினர்.