ஜவுளிக் கடையில் தீ விபத்து: ஊழியர்கள் வெளியேற்றம்; சேதம் தவிர்ப்பு
விழுப்புரத்தில் பிரபல ஜவுளிக் கடையில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
விழுப்புரத்தில் பிரபல ஜவுளிக் கடையில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல ஜவுளிக் கடை, நகைக் கடை அமைந்துள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த ஜவுளிக் கடையில் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், ஜவுளிக் கடையின் கீழ் தளத்தில் உள்ள உணவகப் பகுதியில் தீப்பற்றியது. அது புகைபோக்கி வழியாக சென்றதால் ஜவுளிக் கடையின் முதல், இரண்டாவது தளங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடையின் வெளிப் பகுதியிலும் தீயுடன் புகைமூட்டமும் அதிகரித்தது. இதனால், அச்சமடைந்த ஊழியர்களும், ஜவுளிக் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் வெளியே ஓடி வந்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புப் படையினர் நிலைய அலுவலர் ஜெயசங்கர் தலைமையில் மூன்று வாகனங்களில் வந்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு ஜவுளிக் கடையின் முதல் தளத்தையொட்டிய பகுதியில் (உணவகத்தின் மேல் பகுதி) எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
ஜவுளிக் கடையின் வெளிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் விரைந்து செயல்பட்டு அணைக்கப்பட்டதுடன், சேதமும் தவிர்க்கப்பட்டது.