முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ மேற்படிப்பு: கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணை குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தொலைதூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட

Updated On : 30 மார்ச், 2018 at 2:31 AM
பகிர்:

மருத்துவ மேற்படிப்பில் சேர கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தொலைதூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் சேர தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 
வரும் 2018-19 - ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் எந்தெந்தப் பகுதிகள் தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என வகைப்படுத்தி, அவற்றில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக கடந்த 23 -ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரவீன் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து தமிழக அரசு வரும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.