காவிரி: நல்ல தீர்ப்பு வர வேண்டி கோயிலில் அமைச்சர் சிறப்பு வழிபாடு
காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வர வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழிபாடு செய்தார்.
காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வர வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழிபாடு செய்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய தீர்ப்பு வர வேண்டும் என வேண்டி, வழக்குகளைத் தீர்த்து வைக்கும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை வருகை புரிந்தார். அங்கு அவர், சிறப்பு பூஜை மேற்கொண்டு வழிபாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டு வழிபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரி வழக்கில் தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும் என்றார்.
அப்போது, மேற்கு மாவட்ட அதிமுக செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.